திருவனந்தபுரம்: முன்னணி மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி. பிரபல நடிகை கடத்தல் மற்றும் விசாரணை அதிகாரியை கொல்ல முயற்சி போன்ற வழக்குகளில் திலீப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது தற்போதைய மனைவி காவ்யா மாதவன், முன்னாள் மனைவி மஞ்சு வாரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், மஞ்சு வாரியர் நடித்த ‘கயட்டம்’, ‘செக்ஸி துர்கா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சனல்குமார் சசிதரன். மஞ்சு வாரியர் ஆபத்தான சூழலில் சிக்கியிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ‘மஞ்சு வாரியரை வைத்து ‘கயட்டம்’ படத்தை இயக்கினேன். படப்பிடிப்பின்போது அவருடன் தனியாகப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மஞ்சு வாரியரை அவரது மேலாளரும், உதவியாளரும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சுயமாக முடிவெடுக்க முடியாத ஆபத்தான சூழ்நிலையில் அவர் இருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து இதுவரை மஞ்சு வாரியர் கருத்து தெரிவிக்கவில்லை. அவரது மவுனம் சனல்குமாரின் கருத்தை உறுதிப்படுத்துவது போல் இருப்பதாக மலையாளப் படவுலகில் பேசிக்கொள்கின்றனர்.