சிறைகளில் செல்போன் பயன்பாடு – மாநிலங்களுக்கு பறந்த அவசர கடிதம்!

சிறையில் செல்போன் பயன்பாட்டை தடுக்க ‘ஜாமர்’ பொருத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

மாதிரி சிறை விதிமுறை கையேடு – 2016, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்து சிறைகளிலும் அடிப்படை கொள்கைகளில் ஒருமித்த தன்மையை உருவாக்குவதே அதன் நோக்கம். மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தியும், அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை பல மாநிலங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. அதை விரைந்து உறுதி செய்ய வேண்டும்.

அந்த விதிமுறைகளின்படி, சிறையில் ஊழல் நடைமுறைகளை ஒழிக்க வேண்டும். சிறை ஊழியர்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும். சிறை ஊழியர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தடுக்க வேண்டும். அதற்காக உள்ளே நுழையும் போதும், வெளியேறும் போதும் பதிவேடுகளில் குறிப்பிட வேண்டும்.

சிறைகளின் வெளிப்புற சுவர்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்களை வெளியே இருந்து சிறைக்குள் தூக்கி வீச முடியாதபடி, சுவருக்கும், வார்டுக்கும் இடையே போதிய தூரம் இருக்க வேண்டும். சிறையில் செல்போன் கிடைப்பதையும், அதை பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும். அதற்காக ‘ஜாமர்’ போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். சிறை செயல்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்களின் பின்னணியை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

முதல் முறை குற்றம் செய்தவர்களையும், திரும்ப திரும்ப குற்றம் செய்பவர்களையும் தனித்தனி வார்டுகளில் அடைக்க வேண்டும். முதல் முறை குற்றம் செய்தவர்களை மற்றவர்கள் கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு மருத்துவமனைகளுக்கு கைதிகளை அனுப்ப தேவையில்லாத வகையில், சிறை மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும். கைதிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் குற்ற வாழ்க்கையை கைவிட்டு, பொறுப்பான குடிமக்களாக மாறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.