சாத்தூர் அருகே உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – தொழிலாளி பலி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பெரியகருப்பன் (57) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் சுமார் 15 அறைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வழக்கம்போல இன்று காலை பட்டாசு ஆலையைத் திறந்து இன்றைய பணிக்குத் தேவையான மருந்துகளை கலக்கும் பணியில் சுந்தரகுடும்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த சோலைவிக்னேஷ் (26) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாக அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. அதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமான நிலையில், அங்கு பணியிலிருந்த சோலைவிக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சோலைவிக்னேஷ்
தரைமட்டமான அறை

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அம்மாபட்டி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிர் இறந்தவரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் கட்டட இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கி உள்ளனரா என்று ஆய்வு மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.