பேரறிவாளன் விடுதலை விவகாரம்: மத்திய அரசுக்கு இறுதி கெடு கொடுத்த சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது, வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என்பதே தங்களது நிலைப்பாடு என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இவ்வழக்கை மே 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் இருப்பின் அவற்றை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியது.

அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயல்

இதற்கிடையில், ஆளுநரின் பங்கு குறித்து 14 பக்க அறிக்கையை தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் சட்டசபையின் தீர்மானத்தை ஒருமனதாக முன்மொழிந்த அமைச்சரவையின் முடிவை அமல்படுத்தாமல் ஆளுனர் தடுத்து வைத்திருப்பதுடன், இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறிய செயலாகும். இதுபோன்ற அதிகாரத்தை ஆளுனருக்கு அரசியலமைப்பு சாசனம் 161-வது பிரிவு அளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும். குடியரசுத் தலைவர் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம்.

பேரறிவாளனை நாங்களே விடுவிப்போம்

அமைச்சரவை ஒரு முடிவெடுத்து அதுபற்றி கவர்னர் முடிவெடுக்காமல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா..? இல்லையா..? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம்.

பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுனர் ஏன் முடிவெடுக்கவில்லை?. குடியரசுத் தலைவர் பரிந்துரைக்கவே தேவையில்லையே என்பதே எங்களது கருத்து. சட்டம் தெளிவாக உள்ளது. அமைச்சரவை முடிவு மீது ஆளுனர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

மே 10 இறுதி கெடு

25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் சிறையில் உள்ளார். அவரது நடத்தை நன்றாக உள்ளதால் ஜாமீன் வழங்கினோம், இதில் முடிவெடுக்க என்ன சிக்கல் உள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கவில்லை என்றால் அரசியல் சாசனம், சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புகள் அடிப்படையில் சுப்ரீம்கோர்ட்டே முடிவெடுக்கும் என்று கூறி வழக்கினை வரும் 10ஆம் தேதிக்கு (செவ்வாய்கிழமை) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.