இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலை! வரலாற்றுத் தவறை ஏற்றுக்கொண்டது அரசாங்கம் – நிதி அமைச்சர் கடும் எச்சரிக்கை (Video)



நாட்டில் தற்போது பற்றாக்குறையாக உள்ள  அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டில் முற்றாக இல்லாமல் போகும் அபாயம் இருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இந்நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றது.

தற்போது பற்றாக்குறையாக உள்ள இந்த அத்தியாவசியப் பொருள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமாகும் என குறிப்பிட்டுள்ளார். 

 இந்த நிலைமையை வெற்றிக்கொள்ள கட்சி பேதமின்றி அனைவருக்கும் பொறுப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டில் இலங்கையின் வருமானம் 1500 பில்லியன் ரூபாவாக இருந்தது.

எனினும் 3522 பில்லியன் ரூபா, இதில் மீண்டும் வருமானமாக கிடைக்காத செலவு 2748 பில்லியன் ரூபாய்களாகும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1980ஆம் ஆண்டில் இலங்கையின் தலா தேசிய வருமானம் 23 வீதமாக இருந்தபோதும், 2021ஆம் ஆண்டு அது 8.7வீதமாக குறைந்துள்ளது.

அதேநேரம் முதலாவது வெளிநாட்டுக்கடன் 1954ஆம் ஆண்டு பெறப்பட்டது. இதன்போது 6 மில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக பெறப்பட்டது.

எனினும் 2020ஆம் ஆண்டில் 542 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக பெறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வரியை அதிகரிக்கவேண்டிய காலத்தில் வரியை குறைத்தமை வரலாற்று தவறு என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு முன்னதாக சென்றிருக்கவேண்டும் என்பதையும் ரூபாவின் தேய்மானத்தை முன்னதாக கிரமம் கிரமமாக செய்திருக்கமுடியும் என்பதையும் தாம் ஏற்றுக்கொள்வதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசாங்கங்களும் அவ்வப்போது மக்களை சந்தோசப்படுத்தியதே தவிர நாட்டை பற்றி சிந்திக்கவில்லை என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிதிப்பிரச்சினையின் கீழ் எந்த ஒரு முதலீட்டாளர்களும் நாட்டுக்கு வரப்போவதில்லை.   இந்தநிலையில் மத்திய மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டில் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் மறுசீரமைப்பு நிதி மற்றும் நீதி ஆலோசகர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்பட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த செயற்பாடுகளுக்கு 6 மாதங்களாவது செல்லும் என்றும் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்தியா 500 மில்லியன் டொலர்களை ஏற்கனவே எரிபொருள் கொள்வனவுக்காக வழங்கியிருக்கிறது.

மேலும் 500 மில்லியன் டொலர்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2021இல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தற்போது யதார்த்தமில்லை என்பதால், புதிய இடைக்கால வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் அலி சப்ரி தெரிவித்தார்.

ரொனி டி மெல்லுக்கு பின்னர் எந்தவொரு நிதியமைச்சரும் அதிகாரிகள் தரும் தகவல்களையே நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அலி சப்ரி உரையாற்றிக்கொண்டிருக்கையில் எதிர்கட்சியினர் தொடர்ந்தும் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் மாத்திரம் இலங்கையின் பொருளாதார பிரச்சினையை தீா்க்கமுடியாது என்றும் அலி சப்ரி குறிப்பிட்டார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.