“எந்தவோர் ஆளுங்கட்சி அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் சாலையில் நடமாட முடியாது!" – மன்னார்குடி ஜீயர்

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 26-ம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காயம்பட்ட 17 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள அரசு ஒரு நபர் குழு அமைத்து உத்தரவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டப் பலரும் களிமேடு கிராமத்துக்குச் சென்று பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

தேர் விபத்து நடந்த இடத்தில் மதுரை ஆதினம்

இந்த நிலையில், மதுரை ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ சுவாமிகள் உள்ளிட்டோர் இன்று களிமேடு கிராமத்துக்குச் சென்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு மெளன அஞ்சலி செலுத்தினர். விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதையடுத்து, விபத்து குறித்து ஊர் மக்களிடம் கேட்டறிந்தனர்.

மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர்

பின்னர் மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “களிமேட்டில் அப்பர் சதய விழாவை ஒவ்வொரு ஆண்டும் அடியார் பெருமக்கள் சிறப்பாக நடத்தி வந்துள்ளனர். ஆனால் தற்போது நடைபெற்ற இந்த தேர் விபத்து ஒரு துயரமாக இருக்கிறது. ஒரு தேர் வரும்போது மின்சாரத்துறை உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதே போல சாலையை நெடுஞ்சாலைத்துறை சீரமைத்து கொடுத்திருக்க வேண்டும். யார் மேல் தவறு உள்ளது என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

இதுபோன்ற விபத்து இனி நடக்கக் கூடாது. போன உயிர் போனதாக இருக்க வேண்டும். இனிமேலாவது அரசு கவனமுடன் இருக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மதுரை ஆதீனத்தின் சார்பில் பிரார்த்திக்கிறேன். மதுரை ஆதீன கோயில்களின் இடங்களை குத்தகைக்கு வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்கின்றனர். முன்பிருந்த சன்னிதானத்தின் உடல்நிலை சரியில்லை என்பதை காரணமாக வைத்துக் கொண்டு, அவர்கள் குத்தகை கொடுக்கவில்லை. முன்பிருந்த சன்னிதானம் குத்தகையும் கேட்கவில்லை.

களிமேடு கிராமத்தில் மதுரை ஆதினம்

நான் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள், சட்டமன்றத்தில் கோயில் திருப்பணி செய்யுமாறு கூறுகின்றனர். குத்தகையை கொடுத்தால்தானே கோயில் திருப்பணி செய்ய முடியும். குத்தகையும் கொடுப்பதில்லை, நிலத்தின் வரியும் கொடுப்பதில்லை, கோயில் இடத்தில் வீடு கட்டிக் கொண்டு வாடகையும் கொடுப்பதில்லை. இதை கேட்டால் என்னை அடிப்பேன் என்றும், நீ திருப்பணி செய்து விடுவாயா எனவும் மிரட்டுகின்றனர்.

ஆனால், சட்டமன்றத்தில் மட்டும் கோயில் திருப்பணி செய்யவில்லை என பேசுகின்றனர். ஆதீனத்தின் சொத்துகளை எல்லா அரசியல் கட்சியினரும் வைத்துள்ளனர். ஆனால் ஆளுங்கட்சியினர்தான் அதிகம் இடத்தை வைத்துள்ளனர். பட்டினப் பிரவேசம் என்பது 500 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதச்சார்பற்ற நாடு என சொல்லிக்கொண்டு ஒரு மதத்தை மட்டும் கட்டுப்படுத்துவது ஏன், இந்து சமயத்தை அழிக்க ஆங்கிலேயர்களாலே முடியாதபோது, இவர்கள் என்ன செய்துவிட முடியும். இதையெல்லாம் மேலே உள்ள கடவுள் பார்த்துக் கொள்வார்.

மன்னார்குடி ஜீயர்

கஞ்சனூர் கோயில் மடத்துக்கு உட்பட்ட பகுதியில் மடத்தின் சொத்துகளை வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர். குத்தகையை கொடுக்க மறுக்கின்றனர். கோயில் திருப்பணியை செய்து விடுவாயா என மிரட்டுவதால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால், நான் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் நேரில் சந்தித்து ஆளுங்கட்சி குறித்து சொல்லுவேன் மேற்கொண்டு என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் சுவாமிகள், “பட்டினப் பிரவேசம் என்பது இந்து சம்பிரதாயத்தில் இருக்கக்கூடிய ஒன்று. ஸ்ரீரங்கத்தில் கூட ஆச்சாரியருக்கு நடத்திய பிரவேசத்தை எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினர். பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கக் கூடிய அருகதை எந்த அரசுக்கும் கிடையாது. எந்த இயக்கத்துக்கும் கிடையாது.

மதுரை ஆதீனம் பேட்டி

பட்டினப் பிரவேசம் நிச்சயம் நடக்கும், அதை தடுக்க முடியாது. இந்து தர்மத்துக்கு எதிரான துரோகிகளை… தேசத் துரோகிகளாக கருதி எச்சரிக்கை விடுக்கிறேன். இந்து விரோதமான செயல்களை கடைபிடித்தால் ஆளுங்கட்சியின் எந்த ஒரு அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் சாலையில் நடமாட முடியாது. ஆளுங்கட்சியினர் சாதி, மத, பேதம் இல்லை எனக் கூறுகிறார்கள். கிறிஸ்துவ பாதிரியார், `கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரையில், எங்களால்தான் அரசு உள்ளது. அரசை நாங்கள்தான் நடத்துகிறோம்’ எனக் கூறி வந்தார். அவரைக் கைது செய்ய முடியவில்லை. இந்துக்களுக்கு ஆதரவாக இந்த அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.