சென்னை: சாவிலும் பிரியாத பாசம்… தம்பி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட அண்ணன்!

சென்னை கொரட்டூர் மூன்றாவது மெயின் ரோடு எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரின் மகன்கள் சேட்டு (50), சுரேஷ் (43). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக கொரட்டூர் 3 வது மெயின்ரோடு, இரண்டாவது மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். கொரட்டூர் ரயில்வே பாலத்துக்கு அருகே சுரேஷ் காய்கறி கடை நடத்தி வந்தார். அண்ணன் சேட்டு, தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். அண்ணனும் தம்பியும் பாசமாக இருந்து வந்தனர். சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதனால் அவரின் கல்லீரல் பாதிக்கப்பட்டது. அதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.

தற்கொலை

இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக சுரேஷுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கும் சென்று வந்தார். கடந்த 3-ம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுரேஷின் மனைவி முத்துலட்சுமி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுரேஷின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேஷின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தம்பியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத சேட்டு, மனமுடைந்து காணப்பட்டார். தம்பியின் இறப்பு குறித்து சேட்டு தன்னுடைய நண்பர்களிடம் குடும்பத்தினரிடமும் புலம்பியுள்ளார். அப்போது சேட்டுக்கு அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மனவேதனையிலிருந்த சேட்டு, 3-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேட்டு

வீட்டுக்குள் சென்ற சேட்டு நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சேட்டுவின் சடலத்தை மீட்டனர். பின்னர் இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சேட்டுவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சேட்டுவின் மரணம் தொடர்பாக கொரட்டூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தம்பி இறந்த துக்கம் தாங்க முடியாமல் அண்ணன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.