திருமலை: தாயுடன் ஒன்றாக இருந்த கள்ளக்காதலனை பார்த்து ஆத்திரமடைந்த இளம்பெண், அவரது மர்ம உறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் தும்மலபாலயம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரா (35). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளாக தெனாலி கிராமத்தில் வசித்து வருகிறார். ஐதா நகரை சேர்ந்தவர் சந்தியா (40). இவரது கணவர் இறந்து விட்டார். 20 வயதில் ஒரு மகள் உள்ளார்.இந்நிலையில் சந்தியாவுக்கும், ராமச்சந்திராவுக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரா அடிக்கடி சந்தியா வீட்டுக்கு வந்து தங்கி ஜாலியாக இருப்பாராம். இது மகளுக்கு தெரியவர, பலமுறை கண்டித்துள்ளார். என்றாலும் சந்தியா கள்ளக்காதலை கைவிடவில்லை. நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரா மது அருந்திவிட்டு சந்தியா வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் வீட்டின் மாடிக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். நேற்று அதிகாலை கண் விழித்த மகள், அருகே இருந்த தாய் காணாததால் அவரை தேடி மாடிக்கு சென்றார். அப்போது கட்டிலில் ராமச்சந்திராவும், சந்தியாவும் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கடும் ஆத்திரமடைந்தார். உடனே வீட்டில் இருந்த பிளேடை எடுத்து சென்று ராமச்சந்திரவின் மர்ம உறுப்பை அறுத்துள்ளார். வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். காயத்துடன் துடித்து கொண்டிருந்த ராமச்சந்திராவை மீட்டு, குண்டூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தெனாலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.