கடந்த 18-ம் தேதி இரவு சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களின் வாகனத்தைச் சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, அவர்கள் இருவரும் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான், விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது பேசிய முதல்வர், இந்த விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று அழுத்தமாகக் கூறினார்.
மேலும், விசாரணையில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில்தான், விக்னேஷ் காவல்நிலையத்திலிருந்து தப்பி ஓட முயல்வது போன்றும்… அவரை காவலர்கள் விரட்டிப் பிடிப்பது போன்றும் சி.சி.டி.வி காட்சிகள் சமீபத்தில் வெளியானது.
உயிரிழந்த விக்னேஷின் உடல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை முடித்து தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷின் உடலில் தலை, கண்புருவம், தாடை உள்ளிட்ட 13 இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், அவரின் வலது கால் முறிந்துள்ளதாகவும், ரத்தக்கட்டு காணப்படுவதாகவும், லத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிய அடையாளங்கள் உடலில் காணப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.