ஐபிஎல்: சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

புனே:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். 
பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் டூ பிளெசிஸ் களமிறங்கினர். 62 ரன்கள் சேர்த்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. டூ பிளெசிஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மேக்ஸ்வெல் 3 ரன்களிலும், கோலி 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மகிபால் லாம்ரர்-ரஜத் பட்டிதர் ஜோடி, சென்னை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க, அணியின் ஸ்கோர் 150ஐ கடந்தது. மகிபால் 42 ரன்களும், பட்டிதர் 21 ரன்களும் சேர்த்தனர். அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் தவிர பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் சேர்த்தார். 
சென்னை தரப்பில் மகீஷ் தீக்சனா 3 விக்கெட் வீழ்த்தினார். மொயீன் அலி 2 விக்கெட், பிரிட்டோரியஸ் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.