பாமாயில் இறக்குமதி தொடங்க உள்ளதால் சமையல் எண்ணெய் விலை விரைவில் குறையும்- மத்திய அரசு தகவல்

புதுடெல்லி:
உணவு தானிய கையிருப்பு குறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளதாவது:
ஒட்டு மொத்த உபரியுடன் நாடு உணவு பொருள் கையிருப்பு நிலைமையைக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில் குறைந்தபட்ச தேவையான 75 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை விட 80 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கையிருப்பில் இருக்கும்.
இந்த நிதியாண்டில் 1,050 லட்சம் மெட்ரிக் டன்கள் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், ஆரம்ப மதிப்பீட்டின்படி, ஆயிரத்து 110 லட்சம் மெட்ரிக் டன்களை விட சற்றே குறைவாகவே, நாட்டில் கோதுமை உற்பத்தி அதிகமாக இருக்கும்.
கடந்த ஆண்டு சுமார் 600 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது, இந்த ஆண்டு அதே அளவு எதிர்பார்க்கப்படுகிறது.
40 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஏற்றுமதிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
எகிப்தைத் தொடர்ந்து துருக்கியும் இந்திய கோதுமை இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.  நாட்டில் சமையல் எண்ணெய் கையிருப்பு போதுமானதாக இருக்கிறது. 
இந்தோனேசியாவின் தற்காலிக தடைக்குப் பிறகு, பாமாயில் இறக்குமதி விரைவில் தொடங்கும். இதன் மூலம் நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.