வாஷிங்டன்:சமூக வலைதளமான ‘டுவிட்டர்’ இனி கட்டண சேவையாக மாற்றப்படும் என்ற வதந்திக்கு, அந்நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். தகவல்கள், படங்கள் ஆகியவற்றை ‘மொபைல் போனில்’ பரிமாறிக் கொள்ள ‘டுவிட்டர்’ உதவுகிறது. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதையடுத்து, டுவிட்டர் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவின. இதை எலான் மஸ்க் முற்றிலுமாக மறுக்காமல், ”சாதாரண மக்களுக்கு டுவிட்டர் சேவை என்றும் இலவசமாக கிடைக்கும். அதேசமயம் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு கட்டண முறை வரலாம்,” என கூறிஉள்ளார்.
ஏற்கனவே டுவிட்டர் நிறுவனம், கூடுதல் வசதிகளுடன் ‘டுவிட்டர் ப்ளு’ என்ற கட்டணச் சேவையை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் வழங்கி வருகிறது. இதை உலகம் முழுதும் விரிவுபடுத்த எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். ‘வியாபார நோக்கம் உள்ளவர்கள் கைகளில் துரும்பு கிடைத்தாலும் அதை காசாக்கி விடுவர்’ என்ற சொலவடை எலான் மஸ்க்கிற்கு கச்சிதமாக பொருந்துகிறது.
Advertisement