மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்றுநாள் சுற்றுப்பயணமாக நேற்று மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்றிருந்தார். இதையடுத்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, “சி.ஏ.ஏ செயல்படுத்தப்படாது என திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பிவருகிறது. ஆனால், கொரோனா தொற்று முடிவுக்கு வந்தவுடன் சி.ஏ.ஏ அமல்படுத்தப்படும்” என்று கூறினார். இந்த நிலையில், நேற்று திரிணாமுல் காங்கிரஸின் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, சி.ஏ.ஏ அமல்படுத்தப்படும் என்ற அமித் ஷா-வின் பேச்சைக் கடுமையாக விமர்சித்தார்.
“மக்களைப் பிளவுபடுத்துவதே பா.ஜ.க-வின் வேலை. அமித் ஷா, இந்து-முஸ்லிம்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தவே விரும்புகிறார். நாட்டின் எந்தவொரு குடிமகனின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதையும் நான் விரும்பவில்லை.
சி.ஏ.ஏ-வைப் பயன்படுத்தி மக்களை முட்டாளாக்க நினைப்பதை பா.ஜ.க நிறுத்திக்கொள்ள வேண்டும். வாக்களிக்கும் உரிமை உள்ள அனைவருமே இந்த நாட்டின் குடிமக்கள்தான். அப்படியிருக்க அவர்கள்(இந்திய குடிமக்களான அகதிகள்) எப்படி தங்களின் வாக்குரிமையை விட்டுக்கொடுக்க முடியும். தொடர்ந்து பொய் சொல்லக்கூடிய இவர் எப்படி உள்துறை அமைச்சரானார்?” என அமித் ஷாவை கடுமையாக விமர்சித்தார்.
2019 டிசம்பரில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ-வுக்கு (குடியுரிமை திருத்தச் சட்டம்) எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. மேலும் கொரோனா தொற்றின் காரணமாகவே, சி.ஏ.ஏ இன்னும் அமல்படுத்தப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.