புதுடெல்லி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பாஜக இளைஞரணி அமைப்பு நிர்வாகி தஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்தார். இதனால் பாஜக – ஆம்ஆத்மி தலைவர்களுக்கு இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தஜிந்தர் பால் சிங் பாக்காவை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘தஜிந்தர் பக்காவை 50 பஞ்சாப் போலீசார் வந்து அவரது வீட்டில் கைது செய்து அழைத்துச் சென்றனர். தஜிந்தர் பால் சிங் பக்கா, ஒரு உண்மையான சர்தார்; அவர் இதுபோன்ற கைது நடவடிக்கைக்காக பயப்படவோ அல்லது பலவீனமடையவோ மாட்டார்’ என்று பதிவிட்டுள்ளார்.