கோவை: ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு சினிமா, விளையாட்டு, இசை என்று பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஈஷா அமைப்பினர் வெளியிட்ட தகவல்: மண்வளத்தை பாதுகாக்க உலக நாடுகள் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜக்கி வாசுதேவ் ‘மண் காப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் 100 நாட்கள் மோட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜக்கி வாசுதேவின் இந்த ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு இந்திய திரைத்துறை பிரபலங்கள் நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கன், பிரேம் சோப்ரா, தமன்னா, மவுனி ராய், ஜூஹி சாவ்லா, ஷில்பா ஷெட்டி, மனிஷா கொய்ராலா, கிரிக்கெட் துறையைச் சேர்ந்த ஹர்பஜன் சிங், ஏ.பி.டிவில்லியர்ஸ், மேத்திவ் ஹைடன், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இசை துறையைச் சேர்ந்த பாடகர்கள் சோனு நிகம், ஸ்ரேயா கோஷல், தில்ஜித்தோஷந்த், மலுமா உள்ளிட்ட பலர் தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “உலக பொருளாதார கூட்டமைப்பின் தகவலின் படி, உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் ஒரு விதமான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார வசதியுடைய மக்கள் கூட ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது உங்களின் வயிறு நிரம்பியிருக்கும், ஆனால் உங்கள் உடல் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படிருக்கும். நமது மண் அழிந்து வருவதால் உண்ணும் உணவில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இல்லை. நமது மண்ணை நாம் வளமாக வைத்துக் கொள்ளாவிட்டால், நாமும் நமது எதிர்கால சந்ததியினரும் ஆரோக்கியமாக இருக்க முடியாது. இது மண்ணைக் காக்கும் நேரம். மண் வளத்தை பாதுகாத்து ஆரோக்கியமான, நிலையான பூமியை உருவாக்கும் முயற்சியில் என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “மண் காப்போம் இயக்கத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு சத்குரு பைக்கில் பயணித்து வருகிறார். இந்த மாபெரும் திட்டத்தை கையில் எடுத்துள்ள அவருக்கு எனது பாராட்டுக்கள். வாருங்கள், நாம் அனைவரும் இவ்வியக்கத்தில் பங்கெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மண் காப்போம் இயக்கத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளேன். எதிர்கால தலைமுறைக்காக மண் வளத்தை காக்க வேண்டியது நமது பொறுப்பு. இது தொடர்பான நமது உரையாடல் ஆழ்ந்த அர்த்தமுள்ளதாக இருந்தது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மண்வளத்தை பாதுகாக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.