பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் நடிகர் மீது முன்னாள் மனைவி புகார்| Dinamalar

வாஷிங்டன்:’ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடைந்த மது பாட்டிலால் என் முகத்தை கிழித்து விடுவேன் என மிரட்டியதாகவும், அவரின் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹேர்ட், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
‘ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப், 58, ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படம் வாயிலாக பிரபலம் அடைந்தார். இவர், நடிகை ஆம்பர் ஹேர்ட், 36, என்பவரை காதலித்து 2015ல் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017ல் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், 2018ல் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் நடிகை ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரையில், ஜானி டெப் பெயரை குறிப்பிடாமல், குடும்ப வன்முறைகளுக்கு ஆளான நபர் என்று தன்னை பற்றி குறிப்பிட்டிருந்தார்.இதனால் ஆத்திரமடைந்த ஜானி டெப், தன் முன்னாள் மனைவி மீது அவதுாறு வழக்குப் பதிவு செய்தார்; இழப்பீடாக, 380 கோடி ரூபாய் கோரினார். ‘என்னை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கிய ஜானி டெப், 700 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்’ என, ஆம்பர் வழக்குப் பதிவு செய்தார்.

இந்த வழக்கில், இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜராகி நடிகை ஆம்பர் வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம்:எங்களுக்கு திருமணமான ஒரு மாதத்தில், படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றோம். டெப்பின் குடிப்பழக்கத்தால் எங்களுக்குள் சண்டை வந்தது. அவரிடம் இருந்த மது பாட்டிலை உடைத்தேன். இதனால் ஆத்திரமடைந்த அவர், இன்னொரு மது பாட்டிலை என் மீது எறிந்தார்.

அறையில் இருந்த, ‘பீர், சோடா கேன்’களை என் மீது வீசினார்.உடைந்த மது பாட்டிலை என் முகம், கழுத்து, தாடை பகுதிகளில் வைத்து, என் முகத்தை கிழித்து விடுவதாக மிரட்டினார். என் இரவு ஆடையை கிழித்து எறிந்து, அந்த மது பாட்டிலால், பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். இவ்வாறு கூறிவிட்டு நீதிமன்றத்திலேயே ஆம்பர் கதறி அழுதார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.