லக்னோ: உத்தர பிரதேசம் முழுவதும் மத வழிபாட்டுத் தலங்களில் அனுமதியுடன் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தலாம். ஆனால் வளாகத்தில் இருந்து ஒலி வெளியே வரக்கூடாது. அனுமதியில்லாத ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழலில் பதான் மாவட்டம், தாரன்பூர் கிராமத்தில் அமைந்துள்ள நூரி மசூதியில் ஒலிபெருக்கியை பயன்படுத்த அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. அரசு விதிகளை சுட்டிக் காட்டி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து நூரி மசூதி சார்பில் இர்பான் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், மசூதிகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்துவது அடிப்படை உரிமை என்று கூறப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் விவேக் குமார் பிர்லா, விகாஸ் புத்வார் அமர்வு விசாரித்தது. மனுதாரர் இர்பானின் குற்றச்சாட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் கடந்த 4-ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர். “சட்டவிதிகளின்படி மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது அடிப்படை உரிமை கிடையாது. எனவே வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.