டேராடூன் :
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற கேதார்நாத் கோவில், குளிர்காலத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி மூடப்பட்டது.
இந்தநிலையில், 6 மாதங்களுக்கு பிறகு நேற்று பக்தர்களுக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பிரார்த்தனை நடத்திய பிறகு காலை 6.25 மணிக்கு கோவிலின் பிரதான கதவு திறக்கப்பட்டது. ராணுவத்தின் இசைக்குழு, பக்தி பாடல்களை இசைத்தது.
அப்போது, சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்திருந்தனர். முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமியும் வந்திருந்தார். அவர் பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதல்-மந்திரி முன்னிலையில், உலக அமைதி மற்றும் வளமையை வேண்டி, பிரதமர் மோடி சார்பில் ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டது.
இதுபோல், ‘சார் தாம்’ யாத்திரைக்காக கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை கடந்த 3-ந்தேதி திறக்கப்பட்டது. மற்றொரு கோவிலான பத்ரிநாத் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.