சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மசோதா உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் கிடையாது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொடர் மே 10 ஆம் தேதி வரை 22 நாள்கள் நடைபெறவுள்ளன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று (7ந்தேதி) திட்டம், வளர்ச்சி, பொது, சிறப்பு திட்ட செயலாக்கம், நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
முன்னதாக இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில், இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்தார். அதன்படி இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் கிடையாது.
அதே வேளையில் இன்று பேரவையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படலாம என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல, தமிழ் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு சொத்துரிமை மசோதாவும் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.