இந்தியாவில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெப்ப நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதேவேளையில் போதிய நிலக்கரி இல்லாத காரணத்தாலும், இறக்குமதி நிலக்கரி விலை அதிகரித்துள்ள காரணத்தாலும் அனல் மின் நிலையங்கள் இந்தியாவுக்குப் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் திணறி வருகிறது.
ஒருபக்கம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோல் இந்தியா உற்பத்தி அதிகரித்தலும் போதுமானதாக இல்லை, இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ள இதே நேரத்தில் மத்திய அரசு முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ளது.
மின்சாரச் சட்டம்
மின்சாரச் சட்டம் 11-வது பிரிவைச் செயல்படுத்துவதன் மூலம் மின்சார நெருக்கடியைச் சமாளிக்க, இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடிப்படையில் இயங்கும் அனைத்து அனல் மின் நிலையங்களையும் முழுத் திறனில் மின்சாரம் உற்பத்தி செய்ய உத்தரவிட்டு மின்சாரத் தட்டுப்பாட்டுப் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு
மின்சாரச் சட்டத்தின் 11வது பிரிவின்படி, மத்திய அரசு அசாதாரணச் சூழ்நிலைகளில் எந்த ஒரு அனல் மின் நிலையத்தையும் அதன் வழிகாட்டுதலின்படி இயக்கவும் பராமரிக்கவும் உத்தரவிட முடியும். இதைத் தான் தற்போது மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது.
220 ஜிகாவாட் மின்சாரம் தேவை
வியாழன் மதியம் வெளியான இந்த உத்தரவுக்கு முக்கியக் காரணம் இந்தியாவில் கோடைக்காலம் உச்சத்தில் 220 ஜிகாவாட் அளவிலான மின்சாரம் தேவைப்படும் எனக் கணிப்புகள் வந்துள்ளதை அடுத்து இறக்குமதி நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையத்தை முழுவீச்சில் இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இறக்குமதி நிலக்கரி
இந்த உத்தரவு மூலம் குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் எஸ்ஸார் பவர், கோஸ்டல் எனர்ஜென் ஆகிய நிறுவனங்களின் இறக்குமதி நிலக்கரியில் இயங்கும் அனல் மின்நிலையத்தை இயக்க முடியும் இதன் மூலம் 7 ஜிகாவாட் மின் உற்பத்தியை செய்ய முடியும்.
போதுமான இழப்பீடு இல்லை
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட 17,600 மெகாவாட் நிலக்கரி ஆலைகளில், 10,000 மெகாவாட் மட்டுமே இயங்கி வருகிறது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை டன்னுக்கு 140 டாலர்களுக்குப் போதுமான இழப்பீடு இல்லாததால் குறைந்த அளவில் மட்டுமே இயங்குகிறது.
70 சதவீத மின்சார உற்பத்தி
இந்தியாவில் சுமார் 70 சதவீத மின்சார உற்பத்தி நிலக்கரியை மட்டுமே நம்பியிருக்கும் காரணத்தால் தான் தற்போது மிகப்பெரிய நெருக்கடியில் இந்தியா சிக்கியுள்ளது. இதன் வரும் காலத்தில் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கும் புதிய வழிகளைக் கண்டுப்பிடிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
அடிக்கிற வெயில் ஏசி வேண்டாம், பேன் கூடப் போட முடியாத நிலையில் பல மாநிலங்கள் உள்ளது என்பது வருத்தமான விஷயம்.
Power crisis: Modi govt invoking Section 11 Electricity Act for imported coal power plants
Power crisis: Modi govt invoking Section 11 Electricity Act for imported coal power plants மத்திய அரசு திடீர் உத்தரவு.. முழுவீச்சில் இயங்கும் மின்சார உற்பத்தி ஆலைகள்..!