ஐதராபாத்: முஸ்லிம் பெண்ணை கலப்புத் திருமணம் செய்த ஹிந்து இளைஞரை, அப்பெண்ணின் அண்ணன் ஐதராபாத்தில் நடுரோட்டில் கொடூரமாக அடித்துக் கொன்றான். “சம்பவத்தின் போது சுற்றியிருந்தவர்களிடம் உதவி கேட்டு கெஞ்சியும் யாரும் வரவில்லை. சிலர் வீடியோ எடுத்தனர்.” என கொல்லப்பட்டவரின் மனைவி கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நாகராஜு (25). இவரும் சையது அஸ்ரின் சுல்தானா (21) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஜனவரி 31 அன்று ஹிந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். சுல்தானா பல்லவி என பெயர் மாற்றிக்கொண்டார். இத்திருமணத்தை சுல்தானாவின் அண்ணன் எதிர்த்துள்ளார்.
இந்நிலையில் (மே 04) இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்ற நாகராஜுவை ஒரு கும்பல் கீழே தள்ளிவிட்டு இரும்பு தடியால் கடுமையாக தலையில் அடித்துக் கொன்றது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஆணவக் கொலை என்றும், கொலை செய்தவர் பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் என தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் குறித்து தற்போது சுல்தானா அளித்த பேட்டி:
நானும் என் கணவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தோம் திடீரென்று இரண்டு பைக்குகள் வந்தன, அதில் ஒருவன் எனது அண்ணன் என்பது முதலில் எனக்கு தெரியவில்லை. அவர்கள் என் கணவரை கீழே தள்ளிவிட்டு இரும்பு தடியால் அடிக்க ஆரம்பித்தார்கள். தடுக்க முயன்ற என்னை அண்ணனின் நண்பர்கள் தள்ளிவிட்டனர். 30 முறை அடித்திருப்பார்கள். நான் உதவி கேட்டு கெஞ்சினேன். சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். 20 பேரால் நான்கு பேரை தடுக்க முடியாதா. என் கணவர் இறந்தும் நான் உயிருடன் இருக்கிறேன். காரணம் எனது அண்ணன் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். அவன் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
Advertisement