கிழக்கு கரையோர பகுதி ஒடிசாவுக்கு சூறாவளி புயல் எச்சரிக்கை

புதுடெல்லி:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்றைக்குள் (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இது நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் மேலும் வலுவடைந்து புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது சூறாவளி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் கங்கை நதியின் மேற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவின் கிழக்கு கரையோர பகுதி மக்களுக்கு இந்த சூறாவளி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் இந்த முன்னெச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

2021ல் யாஸ், 2020ல் ஆம்பன், 2019ல் பானி ஆகிய 3 சூறாவளி புயல்கள் ஒடிசாவின் பகுதிகளை கோடையில் தாக்கி இருந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.