"அரசியலுக்கு வந்தா பொய்யெல்லாம் பேசணும்பா…"- `டான்' டிரெய்லர் வசனமும் உதயநிதியின் ரியாக்ஷனும்!

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பு லைகா நிறுவனம். தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வெளியிட இருக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

அதில், “சினிமாவோட டான் சிவா. ஆனால் படத்தின் டிரெய்லரில் ஒரு டயலாக் வச்சு இருக்கீங்க…” எனச் சிரித்தார். டிரெய்லரின் கடைசியில் சிவகார்த்திகேயன், `நான் பேசாம அரசியலுக்குப் போகவா’ எனக் கேட்கும் போது `அதற்கெல்லாம் பொய் சொல்ல தெரியணும்’ என்று பதில் வரும். இந்தக் காட்சியைதான் குறிப்பிட்டு பேசினார் உதயநிதி.

டான் டிரெய்லர் காட்சி

மேலும், “சினிமாவில் இன்றைக்கு இரண்டு டான் இருக்காங்கன்னு சொல்லணும். ஒண்ணு அனிருத், இன்னொன்னு சிவகார்த்திகேயன். இரண்டு பேரும் சேர்ந்து உருவாக்குற பாடல்கள் ஹிட்டாகுது. அவங்க தொடர்ந்து இதை செய்யணும். டாக்டர் படத்தைவிட இந்தப் படம் ஹிட் ஆகும்” என முடித்தார்.

அதற்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கும் விதமாக பேசும் போது, “இந்த டிரெய்லர்ல அந்த வசனம் வரும். அதை பார்த்துட்டு இருக்கும் போது சார் உடனே என் பக்கம் திரும்பினார். ‘இது முழுக்க முழுக்கக் கற்பனை சார். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சார். இந்த சிபி என்னை கோத்து விடுவானு நினைக்கல. உங்க பக்கத்துல உட்கார்ந்து பார்ப்பேன்னு எதிர்பார்க்கல’ எனச் சொன்னேன். சார் சிரிச்சுகிட்டே போய்ட்டார்” என்று பேசினார்.

இந்தப் படம் மே 13-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.