பொதுமக்கள் கவனத்துக்கு… தமிழகத்தில் இதுவரை ‘பைக் டாக்சி’களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை!

சென்னை: தமிழகத்தில் இதுவரை பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக வாடகை டாக்சிகளின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக ஓலா, உபெர் போன்ற நிறுவனங்களின் வாடகை வாகனங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சென்னையில் பைக் டாக்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராபிடோ, ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பைக் டாக்சிகளுக்கான கட்டணம் குறைவு என்பதால் சென்னையில் பலர் இந்த வகையான டாக்சிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவல்லிக்கேணி வரை வாடகை கார்களுக்கு ரூ.150 முதல் ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆட்டோக்களுக்கு ரூ.80 முதல் ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பைக் டாக்சியில் ரூ.40 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் பைக் டாக்சிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, வேகமாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றுவிடலாம் என்ற காரணத்தால் இதுபோன்ற பைக் டாக்சிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த வகையான டாக்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் “இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த இதுவரை தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. பைக் டாக்சிக்கு தொடர்பான அனுமதியும் இதுவரை தமிழக போக்குவரத்து துறையால் வழங்கப்படவில்லை. செயலி மூலமாக டெலிவரி மற்றும் டாக்சி சேவைகளுக்கு பைக்குகளை பயன்படுத்த தமிழக போக்குவரத்து துறை சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை” என்ற தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் கேட்டபோது, “மோட்டார் வாகன சட்டங்களின் படி இருசக்கர வாகனங்கள் வாடகை வாகனங்களாக கருதப்படாது. இதனால் அதற்கு வாடகை வாகனங்களுக்கான மஞ்சள் நம்பர் போர்டுகள் வழங்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.