பண்ணை வீட்டில் பயங்கரம்; கூட்டு பலாத்காரம் செய்து கல்லூரி மாணவி கொலை?… காதலன் உட்பட 8 பேரிடம் விசாரணை

திருமலை: ஆந்திராவில் பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை காதலன் கூட்டு பலாத்காரம் செய்து கொன்றதாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தில் உள்ள கோரண்ட்லா அடுத்த மல்லாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் திருப்பதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3ம் ஆண்டு படித்து வந்தார். சொந்த ஊரான மல்லாப்பள்ளி கிராமத்தில் உள்ள சாதிக் என்ற வாலிபரின் பண்ணை வீட்டில் இளம்பெண் மர்மமான முறையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். சாதிக், மாணவியின் காதலர் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கோரண்ட்லா போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் மகளை திருப்பதியில் இருந்து கடத்திச்சென்ற சாதிக் அவரது நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டார் என இளம்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவியின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து பெற்ற பெற்றோர், உறவினர்கள் மற்றும் மகளிர் சங்கத்தினர் ஆகியோர் கோரண்ட்லா காவல் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உடற்கூறு ஆய்வறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே சாதிக் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 8 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.