மெடிக்கல் ஷாப்பில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்ததால் பலியான பெண்.. தவிக்கும் 2 குழந்தைகள்!

3-வதும் பெண் குழந்தை என சட்டவிரோதமாக கண்டறிந்த நிலையில், மருந்து கடையில் கருக்கலைப்பு செய்ததால் பெண் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கிராமத்தில் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன் – அனிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது முறையாக, நான்கு மாதமாக கருவுற்று இருந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவதாக பிறக்க போகும் குழந்தை ஆணா ? பெண்ணா? என கண்டறிய கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதி இராமநத்தம் வந்துள்ளனர்.
image
அப்போது கருவில் உள்ளது பெண் குழந்தை என சட்டவிரோதமாக கண்டறிந்தநிலையில், கருவைக்கலைக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இராமநத்தத்தில், திட்டக்குடி அடுத்துள்ள கச்சிமைலூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் தனது மெடிக்கல் கடையில் வைத்தே அனிதாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது காலையில் இருந்து அனிதா மயக்கத்தில் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கணவர் வேல்முருகன் இதுகுறித்து முருகனிடம் கேட்டுள்ளார். உடனடியாக முருகன் தனது காரில் பெரம்பலூரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்க மறுக்கவே பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வேல்முருகன் தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது முருகன் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
image
பின்னர் கடந்த 2 நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் அனிதா சிக்கிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் மெடிக்கல் கடை நடத்தி வந்த முருகன், பட்டப்படிப்பு மட்டுமே முடித்த நிலையில், மெடிக்கல் கடையில் வைத்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேப்பூர் போலீசார், முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.