சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகின்றார். இவர், அம்பத்தூர் அருகில் உள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு பாதுகாப்பு அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். இன்று சரவணகுமார் பணியில் இருக்கும்போதே தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சரவணகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ், தற்கொலை நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். முதற்கட்ட விசாரணையில் காவலர் சரவணகுமார் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகமான பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கடும் மன உளைச்சலின் இருந்த சரவணகுமார் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகின்றது. மேலும், தற்கொலைக்கு வேறு ஏதாவது கரணம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணியிலிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரைக் கொல்லும் ஆன்லைன் சூதாட்டம் குறித்த வழக்கில் திமுக அரசு கோட்டை விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், “இன்னும் எத்தனை உயிர் போகும்வரை காத்திருக்க போகிறீர்கள்? ஓராண்டு சாதனையில் இதுவும் ஒன்றா?” எனவும் கேள்வி எழுப்பினார்.