இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை – லண்டன் கோர்ட் தீர்ப்பு

லண்டன்,
கடந்த 2020 மே 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அப்மினிஸ்டர் பகுதியில், ஒரு வீட்டில் 40 வயது ஆண் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அந்த நபரின் தலையில் கத்திக் குத்துக் காயங்களும், சிறுவனின் தோள் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்களும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட நாளில் அந்த வீட்டிற்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் புகுந்து, வீட்டில் இருந்தவர்களை காயப்படுத்திவிட்டு அங்கிருந்து 20 ஆயிரம் பவுண்டு(இந்திய மதிப்பில் சுமார் 19 லட்சம் ரூபாய்) மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. 
இதையடுத்து மெட்ரோபோலிடன் காவல்துறை டி.சி. டேரன் வாரன் தலையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அஜய்பால் சிங்(28), அந்தோனி லாசஸ்(34) மற்றும் கிறிஸ்டோபர் சார்ஜண்ட்(28) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். இதில் அஜய்பால் சிங், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். 
இந்த வழக்கு தொடர்பான விசாரணை லண்டனில் உள்ள ஸ்னேர்ஸ்ப்ரூக் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்றது. அதில் இவர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அஜய்பால் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அந்தோணி மற்றும் கிறிஸ்டோபருக்கு முறையே 18 மற்றும் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.