பெங்களூரு:வேலை வாங்கி தருவதாக ஏராளமானோரிடம் பல லட்சம் ரூபாய் பணம் வாங்கிய பெண் ஒருவர் தப்பி சென்றுள்ளார்.
பெங்களூரு மகாலட்சுமி – லே – அவுட்டை சேர்ந்தவர் மகாலட்சுமி, 45. இவர், இங்கு வேலை வாய்ப்பு ஏஜென்சி ஒன்றை துவங்கி நடத்தி வந்தார். தன்னை தேடி வருவோரிடம் அரசு வேலை மட்டுமின்றி எந்த விஷயமாக இருந்தாலும் என்னால் முடித்து தர முடியும் என கூறி வந்தார்.இதை நம்பிய ஏராளமானோர் அரசு வேலைக்காக பல லட்சம் ரூபாய் கொடுத்திருந்தனர்.
பணத்தை பெற்று கொண்ட இவர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை; பணத்தையும் திருப்பி தரவில்லை.இது குறித்து கேட்டபோது ஏதாவது சாக்கு போக்கு சொல்லி வந்தார். பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி தருமாறு கேட்டு நெருக்கடி அளித்தனர். இதனால் அவர் தலைமறைவாகி விட்டார்.பணம் கொடுத்து ஏமாந்த லதா, 35, காந்தராஜு, 30, சுதர்சன், 30 ஆகிய மூவரும் மகாலட்சுமி – லே – அவுட் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்கள்:மகாலட்சுமி நடத்திய அலுவலகம் முழுக்க அரசியல் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், பிரபலங்களுடன் எடுத்து கொண்ட போட்டோக்களை ‘பிரேம்’ போட்டு மாட்டி வைத்திருந்தார். தன்னை தேடி வருவோரிடம் இந்த போட்டோக்களை காண்பித்து, அரசு வேலை மட்டுமின்றி எந்த விஷயமாக இருந்தாலும் என்னால் முடித்து தர முடியும் என கூறி வந்தார்.இதை நம்பிய பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement