'மன்னார்குடி ஜீயர் பேசிய வார்த்தைகள் தவறு' – முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஆதினங்கள்

சென்னை: முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து தமிழகத்தின் ஆதின மடாதிபதிகள் சந்தித்து பேசினர். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடத்த அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

தருமபுரம் ஆதினம் வரும் 22-ம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சி வைத்துள்ளார். அப்போது, அவரை பக்தர்கள் பல்லக்கில் வைத்து சுமந்து செல்வார்கள். இதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர், ஆதினத்துக்கு கடிதம் அளித்துள்ளார். இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

தடையை எதிர்த்து விவாதங்கள் கிளம்பியுள்ளன. மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார ஜீயர், செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது’ என கூறியது பரபரப்பை கிளப்பியது. எனினும், இந்த விவகாரத்தில் முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக ஆதீனங்கள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி, இன்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம், கோவை பேரூராதீனம் போன்றோர் முதல்வர் ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினர். சில மணிநேரங்கள் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. சந்திப்பு முடிந்த பிறகு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆதீனங்கள், “திமுக அரசு ஓராண்டு நிறைவை செய்துள்ளதை அடுத்து முதல்வரிடம் எங்கள் வாழ்த்துக்களை கூறினோம். பட்டினப் பிரவேசத்தை சுமுகமாக நடத்த அரசு உதவும் என நம்புகிறோம்.

பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் அரசியலை கலக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர்கள் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் பேசிய வார்த்தைகள் தவறு. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.