இப்படி வன்மத்தை கக்கி வருவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்.!

அம்மா உணவகங்களை மூடியே தீருவது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அந்த புரட்சிகர திட்டத்தைப் பற்றி வன்மத்தை கக்கி வருவது கண்டனத்திற்குரியது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அம்மா உணவகங்களை மூடியே தீருவது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து அந்த புரட்சிகர திட்டத்தைப் பற்றி வன்மத்தை கக்கி வருவது கண்டனத்திற்குரியது. 

தி.மு.க ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகத்தான், “அம்மா உணவகத்தால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என்று சென்னை மாநகராட்சி மேயர் பச்சையாக பொய் சொல்லியிருக்கிறார். 

புரட்சித்தலைவி அம்மா பெயரிலான இந்த உணவகங்களை மூட வேண்டும் என்ற காழ்ப்புணர்வோடு அவற்றில் வழங்கப்படும் உணவின் தரத்தைக் குறைப்பது, பசியோடு வாங்க வருபவர்களுக்கு உணவு இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புவது போன்றவற்றை படிப்படியாக செய்துவிட்டு, தற்போது ஏழை மக்களின் மீது பழிபோட நினைக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்? 

உண்மையிலேயே அம்மா உணவகங்களால் மக்களுக்கு பயனில்லையென்றால், இதேபோன்ற உணவகங்களை கருணாநிதியின் பெயரில் நடத்தப் போவதாக அமைச்சர் அறிவித்தது ஏன்? இவர்களையெல்லாம் பின்னாலிருந்து இயக்கிக்கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பாரா?” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.