கெவாடியா: மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களின் 14-வது மத்திய கவுன்சில் மாநாடு, குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார்.
அதில் இந்தியாவில் கரோனாவுக்கு 47 லட்சம் பேர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை ஆதாரமற்றது. இந்தியாவை குறைத்து மதிப்பிடுவதுதான் அறிக்கையின் நோக் கம் என சுகாதார அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இறப்புகள் மற்றும் கரோனா இறப்புகளை சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி முறைப்படியும், வெளிப்படையாகவும் மாநிலங்களில் பதிவு செய்யப்படுகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மாநில சுகாதார அமைச்சர்கள் நேற்று தீர்மானம் நிறைவேற்றினர்.
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், ”இந்தியாவில் கரோனா உயிரிழப்பு மதிப்பீடு குறித்து உலக சுகாதார நிறுவனம் பின்பற்றிய முறை, இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் முயற்சி.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்துக்கு இந்தியா தனது அதிருப்தியை தெரிவிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை வலியுறுத்தினர்.
கரோனா இறப்பை கண்காணிக்க எங்களிடம் வலுவான, வெளிப்படையான தகவல் சேகரிப்பு முறை உள்ளது. கரோனா மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் இந்தியாவின் புகழை கெடுக்கும் முயற்சி இது’’ என்றார்.
பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் சிங்லா கூறுகையில், ‘‘உலக சுகாதார நிறுவனத்தின் கரோனா இறப்பு மதிப்பீடு கற்பனையானது. இந்தியாவில் வலுவான தகவல் சேகரிப்பு முறை உள்ளது. இதை சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை’’ என்றார்.
நிராகரிப்பு
மத்திய பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாராங் கூறுகையில், ‘‘கரோனா விஷயத்தில் இந்தியாவின் சாதனைகளை குறைத்து மதிப்பிட சதி நடந்துள்ளது. நாட்டில் கரோனா இறப்பு விகிதம் குறைவாகவும், தடுப்பூசி செலுத்துவது அதிகமாகவும் உள்ளது. உலக சுகாதாரநிறுவனத்தின் அறிக்கையை அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களும் நிராகரித் துள்ளோம்” என்றார்.
இதேபோல், சிக்கிம் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.கே.சர்மா, பிஹார் அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோரும் உலக சுகாதார நிறுவனம் பின்பற்றிய முறை அறிவியல் பூர்வமானது அல்ல என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியதாவது:
இந்த விவகாரத்தை உலக சுகாதார அமைப்பின் கூட்டத்திலும் இதர பன்னாட்டு அமைப்பிலும் இந்தியா எழுப்பவுள்ளது. கரோனா உயிரிழப்புகளை மதிப்பீடு செய்ய, உலக சுகாதார நிறுவனம் பின்பற்றும் முறைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தும், அதைப் பற்றி கண்டு கொள்ளாமல், கரோனா இறப்பு மதிப்பீட்டை கூடுதலாக வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநில அரசுகள், சட்டப்படி உருவாக்கிய வலுவான மற்றும் துல்லியமான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும். தனியார் அமைப்புகளின் துல்லியமற்ற தகவல்களை உலக சுகாதார நிறுவனம் நம்பக் கூடாது.
இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.