இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பலியானார்கள். மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரின் விஜய்நகர் பகுதியில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று அதிகாலை இங்குள்ள வீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளிலும் பரவியது. வீடுகளுள் தீப்பற்றி எரிந்ததால் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடிவர முயற்சித்துள்ளனர். சிலர் வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து உயிர்பிழைத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் தம்பதி உட்பட 7 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 9 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதே போல், உபியின் மதுராவில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். உபி விபத்து மற்றும் மபி தீ விபத்தில் பலியான 14 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.