சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக அரசால் கடந்த 2012–ம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். தற்பொழுது இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு இந்த ஊதியமானது போதுமானதாக இல்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய பல்வேறு காலக்கட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக இதற்கு முன்னர் பகுதிநேர ஆசிரியர்களின் பணிகள் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.