புதுடெல்லி: கரோனா உயிரிழப்பு குறித்த உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவர குளறுபடிகள் ஆதாரங்களுடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. சுமார் இரண்டரை ஆண்டுகளாக அடுத்தடுத்து கரோனா அலைகள் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உலக நாடுகள் தனித்தனியாக வெளியிட்டு வருகின்றன. சர்வதேச நாடுகளின் புள்ளி விவரங்களின்படி 2021-ம் ஆண்டு இறுதி வரை கரோனாவால் 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பாய்சன் ரீகர்சன் கணித மாதிரி
இந்த புள்ளிவிவர எண்ணிக்கையை உலக சுகாதார அமைப்பு ஏற்க மறுக்கிறது. உயிரிழப்பு குறித்த உண்மையை பல்வேறு நாடுகள் மறைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அந்த அமைப்பு, “பாய்சன் ரீகர்சன் மாடல்” (Poisson regression model) கணித மாதிரியின் அடிப்படையில் கரோனா உயிரிழப்பு குறித்த புள்ளி விவரத்தை அண்மையில் வெளியிட்டது. இதன்படி கடந்த 2020 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 1.5 கோடி பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
குறிப்பாக பிரேசில், கொலம்பியா, எகிப்து, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், இத்தாலி, மெக்ஸிகோ, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, பிரிட்டன், துருக்கி, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 20 நாடுகளில் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
மத்திய அரசின் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் இதுவரை 5.24 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2021 இறுதி வரையிலான காலத்தில் இந்தியாவில் 47 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. சுமார் 10 மடங்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
புள்ளிவிவர குளறுபடி
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவர குளறுபடிகளை இந்திய புள்ளியல் துறை நிபுணர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளனர். ‘‘கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் கரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அந்த மாதத்தில் சீனா மற்றும் சில நாடுகளில் மட்டுமே கரோனா பரவல் உச்சத்தில் இருந்தது.
இந்தியாவில் கடந்த 2020 ஜனவரி 21-ம் தேதிதான் கேரளாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அந்த மாதத்தில் வெகு சிலரே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. அப்படியிருக்கும்போது கடந்த 2020 ஜனவரியில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் கரோனா பரவல் மிகக் குறைவாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட 3 மாதங்களில் மட்டும் 3.29 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதேபோல அந்த அமைப்பின் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன’’ என்று இந்திய புள்ளியல் துறை நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புள்ளிவிவர குளறுபடியை உலக சுகாதார அமைப்பே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்று அந்த அமைப்பு உறுதி அளித்திருக்கிறது.