தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தாதவர்கள் 1.48 கோடி பேர் இருப்பதாக கணக்கிடப்பட்ட்டுள்ளது.
இவர்களின் பெயர் பட்டியலையைக்கொண்டு அவர்களது தொலைபேசி எண்களில் நேரடியாக தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இந்த பணிக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் பொது தளத்தில் அனைவருக்கும் கிடைக்கும் படி வெளியானது. இதில் தடுப்பூசி செலுத்தாத நபர்களின் பெயர், முழு முகவரி, செல்போன் எண், முதல் தடுப்பூசி எந்த மையத்தில் எப்போது செலுத்திக் கொண்டனர் என்ற விவரங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் புகார் எழுப்பப்பட்டது.
இந்த தகவல்களைக் கொண்ட excel பட்டியல் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரக கூகுள் கணக்கிலிருந்து லிங்காக வெளியானது. இந்த லிங்கை யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து தகவல்களை பார்க்க அனுமதி இருந்தது. மேலும் இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் எடிட் செய்யவும் அனுமதி இருந்தது.
இதுபொதுமக்களின் தனியுரிமையை பாதிக்கும் என சமூக ஊடகத்தில் பலரும் குரல் எழுப்பிய பிறகு இந்த தவறு சரி செய்யப்பட்டு, இந்த தகவல்கள் பொது தளத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளன.