புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள தாஜ்மகாலில் 22 அறைகள் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்துக் கடவுள் சிலைகள் உள்ளனவா? எனத் திறந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க ஏஎஸ்ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பாஜகவினரால் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முகலாயர் ஆட்சிக் காலத்தில் மன்னர் ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மகால். இதை அவர் தன் மனைவி மும்தாஜின் நினைவாக 1653 ஆம் ஆண்டில் ஆக்ராவில் கட்டிமுடித்தார். தற்போது, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தாஜ்மகால், நவீன உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் தாஜ்மகாலைக் கண்டு ரசித்து வருகின்றனர். தாஜ்மகாலின் வலதுபுறம் ஷாயி மசூதியும் கட்டப்பட்டுள்ளது. இதில், தாஜ்மகாலின் வாரவிடுமுறை நாளான வெளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்த ஆக்ரா முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறையினரால் (ஏஎஸ்ஐ) ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் பராமரிக்கப்படுகின்றன. இதன் பாதுகாப்பின் பொறுப்பு தேசியப் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்த பழமையான சிவன் கோயிலை இடித்துவிட்டு மன்னர் ஷாஜஹான் இந்த தாஜ்மகாலை கட்டியதாகக் கூறப்படுகிறது. இதை பல ஆண்டுகளாக இந்துத்துவா அமைப்புகள் தாஜ்மகால் மீதானப் புகாராக எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், தாஜ்மகாலுக்குள் சுமார் 22 அறைகள் நிரந்தரமாகப் பூட்டி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவற்றை திறந்து அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் மற்றும் கல்வெட்டுப் பதிவுகள் எதுவும் வைக்கப்பட்டுள்ளனவா? எனப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவாக அயோத்தியின் செய்தித்தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ்சிங் தொடுத்துள்ளார். தன் மனுவில், அறைகளை திறந்து பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க ஏஎஸ்ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக தலைவரான ரஜ்னீஷ் கோரியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்புகளும் நீதிமன்ற மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இதில், தாஜ்மகால் இருந்த இடத்தில் அதற்கும் முன்பாக சிவன் கோயில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அயோத்தி பாஜகவின் மூத்த தலைவரான ரஜ்னீஷ்சிங் கூறும்போது, ”கடந்த 2020 முதல் தாஜ்மகாலில் மூடி வைக்கப்பட்டுள்ள அறைகளில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சி செய்து வருகிறேன். இதன் மீது தகவல் உரிமை சட்டத்தில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையிடமும் கேட்டிருந்தேன். அதில், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பூட்டி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கின்றனர். வேறுவழியின்றி உண்மையை வெளிகொண்டுவர இதை வழக்காகத் தொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக இந்துத்துவா அமைப்பினர் தாஜ்மகாலை, ‘தேஜோமகால்’ என்றே குறிப்பிடுகின்றனர். இதன் வளாகத்தில் சிவன் சிலை இருப்பதாகக் கூறி அதற்கு பூஜை செய்யவும் பலமுறை முயற்சித்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி கூட, அயோத்தியிலுள்ள ஒரு மடத்தின் தலைவரான துறவி பரமஹன்ஸ் தாஸ் தாஜ்மகாலுக்கு வந்திருந்தார். உள்ளே இருக்கும் சிவன் கோயிலை தரிசிக்க விரும்புவதாகவும் கூறி இருந்தார்.
எனினும், அவரது கையில் இரும்பாலான பிரம்மதண்டம் இருந்தமையால் துறவிக்கு அனுமதி கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் மே 4 இல் வந்தவரை ஆக்ரா போலீஸார் கைது செய்து அரசு விருந்தினர் மாளிகையில் சிறைப்படுத்தினர். இதை எதிர்த்து உண்ணாவிரதமும் இருந்த துறவி பரமஹன்ஸ், தாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதாகக் கூறி அயோத்தி திரும்பினார்.
இந்நிலையில், தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அயோத்தி பாஜகவினரால் இந்த மனு தொடுக்கப்பட்டுள்ளது.