பெங்களூரு : பெங்களூரில் நேற்று மாலையும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பெங்களூரில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. மாலையானதும் மேக மூட்டமான வானிலை உருவாகி, மழை கொட்டி தீர்க்கிறது
.நேற்று மாலை 6:30 மணியளவில், இடி, மின்னலுடன் மழைதுவங்கியது. எலக்ட்ரானிக் சிட்டி, ஜெயநகர், பசவனகுடி, சிவாஜிநகர், மெஜஸ்டிக், ஹனுமந்த நகர், ஹெப்பகோடி, வித்யாபீடம் சதுக்கம், மைசூரு சாலை, எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை உட்பட, பல்வேறு இடங்களில் மழை பெய்தது.வார இறுதி நாள் என்பதால், வெளியே வந்த பலரும் மழையில் சிக்கிக்கொண்டனர். சாலைகளில் ஏரிகளை போன்று, நீர் நிரம்பியதால் வாகன பயணியர், பாதசாரிகள் அவதிப்பட்டனர். பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால், வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மழையில் நனைந்தபடியே, இரு சக்கர வாகன பயணியர் நின்றிருப்பதை காண முடிந்தது.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், பெங்களூரில் மழை பெய்கிறது. அடுத்த இரண்டு நாட்கள் மழை பெய்யும் என, வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement