புதுடில்லி,-தெலுங்கானாவில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த, ‘ஆன்லைன்’ மருந்தக அதிபரை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் உள்ள தொமால்குடா என்ற இடத்தில், ‘ஜே.ஆர்.இன்பினிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. ‘ஆன்லைன்’ வாயிலாக மருந்துகளை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இந்த நிறுவனத்தில் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, அமெரிக்காவை சேர்ந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து, ‘இ – மெயில்’ மற்றும் இணைய வழி குரல் அழைப்புகள் வாயிலாக ‘ஆர்டர்’ களை பெற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை போதை பொருட்களை ‘சப்ளை’ செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து அந்நிறுவனத்தில் இருந்த மடிக்கணினிகள், மொபைல் போன்கள், 3.71 கோடி ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மருந்தகத்தை நடத்தி வந்த நபரையும் கைது செய்தனர்.
Advertisement