பெங்களூரு, : பெங்களூரு மாநகராட்சியின் புதிய மண்டலங்களின், சுகாதாரம், குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நகர ஆரம்ப சுகாதார மையம், சமுதாய சுகாதார மையங்களை, நிரந்தரமாக தங்களிடம் ஒப்படைக்கும்படி, அரசிடம் மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், மேற்கு, தெற்கு மண்டலங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இவற்றை மாநகராட்சியே நிர்வகிக்கிறது. ஆனால், புதிய மண்டலங்களான மகாதேவபுரா, தாசரஹள்ளி, எலஹங்கா, ஆர்.ஆர்.நகர், பொம்மனஹள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையின் 49 நகர ஆரம்ப சுகாதார மையங்கள், இரண்டு சமுதாய சுகாதார மையங்கள், அமைச்சவையின் ஒப்புதல் பெற்று, 12 மாதங்கள் வரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டன.கடந்த 2021 செப்டம்பருடன், 12 மாத காலம் முடிந்துள்ளதால், இந்த சுகாதார மையங்களை மீண்டும் தன் வசம் பெற்றுக்கொள்வது குறித்து, சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆரம்ப சுகாதார மையம், சமுதாய சுகாதார மையங்களை, நிரந்தரமாக தன் வசம் ஒப்படைக்கும்படி, அரசிடம் மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.சுகாதாரத்துறை சார்பில், ஊழியர்களை நியமித்து, இம்மையங்களை நிர்வகிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement