திருமங்கலம் அருகே புகழ்பெற்ற அம்மன் கோவிலில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக பிரியாணி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்துள்ள பி அம்மாபட்டி கிராமத்தில் சடச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த திருவிழாவின்போது பிரியாணி பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுவது தனிச் சிறப்பாக உள்ளது.
அந்த வகையில், கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்கள் காணிக்கையாக அளித்த 50 கிடா, 150 சேவல் ஆகியவை அம்மனுக்கு பலியிடப்பட்டது.
பின்னர், 50 கிடா, 150 சேவல் இறைச்சிகளை கொண்டு பிரியாணி செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்று இந்த பிரியாணி வழங்கப்பட்டது.
இந்த கோவில் திருவிழாவில் சுமார் 20 சமுதாய மக்கள் பங்கேற்பதாக சொல்லப்படுகிறது.