புதுடெல்லி: தெலங்கானாவில் உள்ள டோமல்குடா அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜெஆர் இன்பினிட்டி தனியார் நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த சட்ட விரோத இணையதள மருந்தகம் மூலம் அமெரிக்கா உள்பட பல வெளிநாடுகளுக்கு போதை மருந்துகள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இந்நிறுவனத்தின் ஊழியர்கள் இ-மெயில் மற்றும் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரொட்டோ கால் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு போதை மருந்துகளை விற்று வந்தது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இங்கு இருந்து ரூ.3.17 கோடி பணம், லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதில், பெரும்பாலும் அதிகளவு தூக்கத்தை ஏற்படுத்தும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் போதை மருந்துகளே அதிகளவில் சட்ட விரோதமாக விற்கப்பட்டுள்ளது.