‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’, ‘கங்காரு’ படங்களின் இயக்குநர் சாமி, இப்போது குழந்தைகளுக்கான படமான ‘அக்கா குருவி’யை இயக்கியிருக்கிறார்.
ஆரம்பத்துல தொடர்ச்சியா படங்கள் இயக்குனீங்க.. அப்புறம் ஒரு இடைவெளியாச்சு..?
”நான் என்ஜீனியரிங் படிச்சிருக்கேன். 1990கள்ல சினிமாவுக்காக வந்தேன். ஆனா, 1995லதான் நுழைய முடிஞ்சது. பார்த்திபன் சார், சேரன் சார், எஸ்.ஏ.சந்திரசேகர் சார்னு இவங்ககிட்ட உதவி இயக்குநர் வாழ்க்கை பத்து வருஷம் ஓடுச்சு. 2005ல ‘உயிர்’ பண்ணினேன். அதன்பிறகு அடுத்தடுத்து ராக்கெட் வேகத்துல படங்கள் இயக்கினேன். இதற்கிடையே மூணு படங்கள் டிராப் ஆகிடுச்சு. ‘சிந்துசமவெளி’ கொஞ்சம் ஒவர் டோஸ் ஆச்சு.
‘பாகுபலி’ மாதிரி ஒரு சிலம்பத்தை மையமா வச்சு ஒரு டாகுமெண்ட்ரி படம் பண்ணினேன். பதினொரு ரீலுக்கு பிறகு படம் வளரல. அந்தப் படம் வந்திருந்தால் என் கரியர் மாறியிருக்கும். அதன் பிறகு சர்வைவல் பிரச்னை.. என்னொட ரெகுலர் வேலையே ஸ்கிரிப்ட் எழுதுறதுதான். இப்பவும் என் அலமாரியில 150 ஸ்கிரிப்ட் இருக்கு. ஒரு தயாரிப்பாளர்கிட்ட போகும்போது, ‘உங்க பட்ஜெட் என்ன? எந்த மாதிரி கதை எதிர்பார்க்குறீங்க’னு கேட்டு அதுக்கேத்த மாதிரி நாலு கதை சொல்வேன். ‘உங்களுக்கு கான்ட்ரவர்சி தான் நல்லா வரும்.. அப்படியொரு கதை சொல்லுங்க’னு சொல்வாங்க. அப்பத்தான் எனக்கு ரஷ்யன் எழுத்தாளர் இவான் துர்கனேவ் எழுதிய `ஃபர்ஸ்ட் லவ்’ நாவல் நினைவுக்கு வருது. 1880ல வந்த புக். அதை மையமா வச்சு ‘சிந்து சமவெளி’யைப் பண்ணினேன்.
இங்கே ஆண்கள் தப்பு பண்ணினா ஏத்துக்கிறாங்க. ஆனா, ஒரு பெண் விரும்பிப் போய் செக்ஸ் வச்சிக்கிட்டா தப்புங்கறாங்க. சென்ஸார்ல பார்க்குறாங்க. சர்ட்டிபிகேட் கொடுக்கறாங்க. ஆனா படம் வந்த பிறகு சமூக ஆர்வலர்கள்னு பலர் தியேட்டருக்கு வெளியே நின்னுக்கிட்டு, பெண்கள் பார்க்கக்கூடாதுனு சொல்றாங்க. அந்த டைம்ல என் வீட்டுல எனக்கு குழந்தை பிறந்திருந்தது. என் வீட்டைத் தேடி வந்து கல்லெறிஞ்சாங்க. அதன்பிறகு சொந்த ஊருக்கு திரும்பினேன். அதன்பிறகு நல்ல பெயர் வாங்கணும்னு ‘கங்காரு’வை பண்ணினேன். அடுத்து ‘மிருகம்2’, ‘ராஜாளி’னு படங்கள் ஆரம்பிச்சேன். அது டேக் ஆஃப் ஆகல. அதன்பிறகு என்னோட நண்பர்கள் நலம் விரும்பிகள் சேர்ந்து ‘அக்கா குருவி’யை ஆரம்பிச்சோம்.”
முறைப்படி ரைட்ஸ் வாங்கணும்னு எப்படி தோணுச்சு?
”என் முந்தைய படம் ‘கங்காரு’ கூட இன்னொருத்தர் கதைதான். கதை இருந்தா, இயக்குறது எளிது. ரெண்டு லட்சம் பணம் கொடுத்து வாங்கினேன். ‘அக்கா குருவி’ ரைட்ஸ் வாங்க மஜீத் மஜிதிக்கு மெயில் அனுப்பினேன். இந்தப் படத்தை முன்னாடி இந்தியில எழுத்திருந்ததால, மும்பைக்கு போய் கேட்டேன். அவங்க அதிக விலை சொன்னாங்க. அப்புறம் பேரம் பேசி, விலையை குறைச்சு முறைப்படி ஜிஎஸ்டி செலுத்தி வாங்கினேன். ஒருத்தர் உழைப்பை திருடக்கூடாது. அது அசிங்கம். இன்னொருத்தர் உழைப்பை திருடுறது கேவலமான வேலை. அதை நான் செய்யவே மாட்டேன். உண்மையா இருக்கணும்னு நினைச்சேன். நான் ரைட்ஸ் வாங்கி பண்றதை வெற்றிமாறன் சார்கூட பாராட்டினார்.