பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதியளித்த தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சேயோனிடம் பேசினோம், “பாரம்பரியமிக்க திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஶ்ரீ குருஞானசம்பந்தர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு ,ஒவ்வொரு வருடமும்’ பட்டினப்பிரவேசம் நிகழ்வு நடைபெறுவது வழக்கமாகும். இந்நிகழ்வில் பக்தர்கள் குருமகாசந்நிதானம் அவர்களை பல்லக்கில் அமர வைத்து திருமடத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வரக்கூடிய வரலாற்று நிகழ்வாகும். இந்நிகழ்வுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கடந்த 27.04.2022 ஆம் தேதியன்று பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு தடை விதித்தார்.
உலகெங்குமுள்ள தருமபுர ஆதீன சீடர்கள் வேண்டுகோளை ஏற்று பட்டினப்பிரவேச நிகழ்வின் வரலாற்றை ஆராய்ந்து தமிழக முதல்வர் அவர்கள் சைவ ஆதின குருமகா சந்நிதானங்களோடு கலந்துரையாடினார்கள். தற்போது பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தமிழக அரசால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பட்டினப்பிரவேச நிகழ்வு தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற அனுமதி அளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
பட்டினப்பிரவேசம் நிகழ்வில் ஏற்பட்ட பிரச்னையை களைவதற்கு உரிய முயற்சிகள் எடுத்து அதற்காக பாடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு,
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்களுக்கும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், இந்து சமய அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோருக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.