உத்தரபிரதேசத்தில் அட்டூழியம் ‘லிப்ட்’ கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள்: போக்சோ சட்டத்தில் கைது

அலிகார்: உத்தரபிரதேசத்தில் நடந்து சென்ற சிறுமியை பைக்கில் அழைத்து சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த 49 வயது மதிக்கத்தக்க போலீஸ் கான்ஸ்டபிள், கடந்த சில நாட்களுக்கு முன் அலிகார் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது 16 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்றார். அவரிடம், வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி தனது பைக்கில் ஏற்றிச் சென்றார். சிறிது தூரம் சென்றபின், அங்குள்ள ஒதுக்குபுறமான இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். கான்ஸ்டபளிடம் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமியை தாக்கியதால், அவர் காயமடைந்தார். ஒருவழியாக கான்ஸ்டபளின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி, தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தது. தனது பெற்றோரிடம் தனக்கு நேரந்த கொடுமையை கூறினார். அவர்கள் கான்ஸ்டபிளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அலிகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், ‘சிறுமிக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்து சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்த கான்ஸ்டபிள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். தற்போது அந்த சிறுமி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உள்ளூர் மாஜிஸ்திரேட் முன், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் கான்ஸ்டபிள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.