ரூ.30 கோடி தேவை: வங்கி கடன் வாங்கி கட்டிடம் கட்ட நடிகர் சங்கம் முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வங்கியில் கடன் பெற்று நடிகர் சங்க கட்டிட பணிகள் செயல்படுத்தப்படும். முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் சில புதிய வழக்குகள் தொடரப்படும். இவைகள் உள்பட மேலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

பொதுக்குழுவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி, மூத்த நடிகைகள் ராதிகா, பாரதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

பொதுக்குழுவை வாழ்த்தி ரஜினிகாந்த் அனுப்பிய ஆடியோ ஒலிபரப்பபட்டது அதில் அவர் பேசியிருந்தாவது: ரொம்ப நாட்களுக்கு முன்பாக பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று முதன் முதலில் பொதுக்குழுவை கூட்டி உள்ள பாண்டவர் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய எனக்கு பாராட்டி விருது வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறேன். பாண்டவர் அணியினர் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு இருக்கிறீர்களோ அவையெல்லாம் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன். என்று பேசி இருந்தார்.

பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் அளித்த பேட்டியில் கூறியதாவது: நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர இரவு விழா நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம். இதுவரை 70 சதவீத கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது. இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படி திரட்டலாம் என்று ஆலோசனை செய்துள்ளோம்.

தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் கேட்டு, அவர்களிடமும் நிதியை திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர் நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம்.

இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்படும். நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன்பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது. சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒருமுறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.