செல்பி மூலம் இயக்குனருக்கு பதிலடி கொடுத்த மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சுவாரியரை பொருத்தவரை நல்ல கதைகளுக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் மலையாள திரையுலகில் விருதுகளை குறிவைத்து படம் எடுக்கும் இயக்குனர் சனல்குமார் சசிதரன் என்பவர் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காயாட்டம் என்கிற படத்தில் நடித்தார் மஞ்சு வாரியர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‛‛மஞ்சு வாரியர், மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறார் அவரை போன் மூலமாகவோ இ-மெயில் மூலமாகவோ தொடர்பு கொண்டால் எந்த பதிலும் இல்லை'' என சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் சனல்குமார் சசிதரன். அவரது இந்த பதிவு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனக்கு குறுஞ்செய்திகள் மூலமாக தொல்லைகள் தருவதாகவும் சோசியல் மீடியா மூலமாக தன் மீது அவதூறு பரப்புவதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையில் புகார் அளித்தார் மஞ்சுவாரியார்.

இதைத்தொடர்ந்து சனல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்தநிலையில் மஞ்சுவாரியர் தனது நீண்ட நாள் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து ஜாலியாக பொழுதுபோக்கி உள்ளதுடன் அவர்களுடன் சேர்ந்து விதவிதமாக செல்பியும் எடுத்து அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நான் யாருடைய பிடியிலும் சிக்கியிருக்கவில்லை சுதந்திர பறவை ஆகவே இருக்கிறேன் என்பதை ஒரு பதிலடியாகவே இயக்குனர் சனல்குமார் சசிதரனுக்கு மஞ்சு வாரியர் கொடுத்துள்ளார் என்று சொல்லலாம்.

காயாட்டம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் சனல்குமார் சசிதரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடும் மற்றும் அவரது நடவடிக்கையில் மாறுபாடு கண்டு அவரிடம் இருந்து ஒதுங்கி இருந்ததால் தான், தற்போது மஞ்சு வாரியர் அவரது அழைப்புகளுக்கோ குறுஞ்செய்திகளுக்கோ பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.