ரத்தக்களறியாகும் இலங்கை: ஆளும் கட்சி எம்.பி. அடித்துக் கொலை: தீவிரமாகும் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம்

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்த மகிந்தா ராஜபக்சே விலகியுள்ள போதிலும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளும் கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. பொருட்கள் விலை உயர்வு மேலும் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார சுழற்சியும் தடைபட்டுள்ளது.

இதனால் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர் போராட்டக்காரர்கள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு போராடி வருகின்றனர்.

வரலாறு காணாத வன்முறை

இந்தநிலையில் இலங்கையில் போராட்டம் நடத்த வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதிபர் மாளிகைக்கு எதிரே முகாமிட்டு போராடி வந்த போராட்டக்காரர்கள் மீது கம்புகளை கொண்டு ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கினர்.

இதுமட்டுமின்றி அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களையும் அவர்கள் கிழித்தெறிந்தனர். மேலும் இதர கட்டமைப்புகளையும் அடித்து நொறுக்கினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

வன்முறையை நிறுத்துமாறு அறைகூவல்விடும் புத்த சன்னியாசி

பரஸ்பரம் மோதிக் கொண்ட இரு தரப்பையும் கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் விரட்டி அடித்தனர்.

இதனிடையே கொழும்புவின் புறநகர் பகுதியான நிட்டம்புவில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

பின்னர் அவர் அருகில் உள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடைய முயன்றார். ஆனால் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கொல்லப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரல

இதுமட்டுமின்றி மகிந்தா ராஜபக்சே பதவி விலகியுள்ளபோதிலும் அதிபர் கோத்தபய பதவி விலகக்கோரி கொழும்பு நகரில் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறன. சில இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.