புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் வழக்கு: உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க தடை

புதுடெல்லி:  நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுவதாகக் கூறி, அதை தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த விதிமுறைகள் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் ஏ.எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ இதற்கு எதிரான வழக்குகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை  உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றங்களில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது’’ என்றார். இதன் பின்னர் உயர்நீதிமன்றங்கள் இந்த வழக்கை விசாரிக்க தடை விதித்த நீதிபதிகள் அடுத்த விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.