தீவைக்கப்பட்ட ராஜபக்சேவின் பூர்வீக இல்லம் – இலங்கையில் தொடரும் பதற்றம்

கொழும்பு: இலங்கையில் போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக இல்லம் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதனால் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. தலைநகர் கொழும்பில் நாடாளுமன்றம் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் கடந்த சில தினங்களாக முகாமிட்டு போராடி வரும் நிலையில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். கொழும்பு அலரி மாளிகைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை கிழித்தெறிந்து தாக்குதல் நடத்திய அவர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

ஒருகட்டத்தில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் சுட்ட ஆளும் கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. தொடர் வன்முறையை அடுத்து கொழும்பு நகரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இலங்கை பிரதமர் ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் வீடு முற்றுகை: ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில் அவரின் ராஜபக்சே சகோதரர்களின் பூர்வீக இல்லமான, அம்பாந்தோட்டையில் உள்ள மெதமுலனா இல்லம் போராட்டக்காரர்கள் தீவைக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில், மெதமுலனா இல்லம் முழுவதுமாக எரிந்துகொண்டிருக்கிறது. இதேபோல் ராஜபக்சே அருங்காட்சியகம் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இல்லம் மட்டுமில்லாமல், ஆளுங்கட்சி எம்பிக்கள் பலரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன. அவர்கள் பலரின் கார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால், போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு பயந்து கட்சி மற்றும் அரசின் உயர்மட்ட தலைவர்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி செல்கின்றனர் என்று இலங்கையில் இருந்து தகவல்கள் வெளிவருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.